Thursday, July 23, 2015

Karpagavalli nin

கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் 
நற்கதி அருள்வாய் அம்மா - தேவி...(கற்பக)
பற்பலரும் போற்றும் பதிமயிலாபுரியில் 
சிற்பம் நிறைந்த உயர் சிங்கார கோவில் கொண்ட... (கற்பக)

நீ இந்த வேளை தன்னில் சேயன் எனை மறந்தால் 
நான் இந்த நானிலத்தில் நாடுதல் யாரிடமோ 
ஏனிந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள 
ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா 

எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இறங்கி என்றும் 
நல்லாக்கி வைத்திடும் நாயகியே - நித்ய கல்யாணியே 
கல்யாணியே கபாலி காதல் புரியுமந்த உல்லாசியே 
உமா உன்னை நம்பினேன் அம்மா 

நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனை காப்பாய் 
வாகேஸ்வரி மாயே வாராய் இது தருணம் 
பாகே ஸ்ரீ தாயே பார்வதியே இந்த 
லோகேஸ்வரி நீயே உலகினில் துணை அம்மா

அஞ்சனமயிடும் அம்பிகையே எம்பிரான் 
கொஞ்சி குலாவிடும் வஞ்சியே நின்னிடம்
தஞ்சமென அடைந்தேன் தாயே உன் சேய் நான் 
ரஞ்சனியே ரட்சிப்பாய் கெஞ்சுகிறேன் அம்மா 

No comments:

Post a Comment